அன்புத் தங்கை அனிதா

சாவுக்கே சாவு வாராதா?

...........................................

மருத்துவம் கிடைக்காவிட்டால்
என்னடா கண்ணு
இந்த நாட்டில்
வேறு படிப்பாடா இல்லை?

தற்கொலைதான்
தீர்வென்றால்
நாம் எத்தனை பேரடா
செல்லம்
உயிரை மாய்ப்பது?

நெஞ்சம்
பதறுகிறது

ஊரே
கதறுதுடா

அப்பா அம்மா
நம்ம சொந்தமெல்லாம்
தங்கம் ஒன்னக் காணாம
மாரடிச்சு
ஒப்பாரி வைக்குதுடா

கோட்டைகளுக்கு
நம் அழுகுரல்கள்
கேட்கவே கேட்காதுன்னு
கொடுங்கோபம்  நீயும் தான்
கொண்டாயோ?

மருத்துவராகும் தேர்வுக்கு
முறை இது என்று
முறையற்றவர்கள் சொல்கின்றார்கள்

சமத்துத்துவத்தின்
குரல்வளை நெறிக்கப்பட்டதற்கு
உன் குரல்வளையை
ஏனடா பலி கொடுத்தாய்?

அரசியல் சூதாட்டத்தில்
மானமும் மரியாதையும்
அடகு வைத்ததற்கு
ஆட்சியாளர்கள்
அவரன்ரோ
தூக்கிட வேண்டும்?

மருத்துவச்சியாகி
நம்ம சனத்து
உசிரைக் காப்பாத்தும்
ஆச வெச்ச பாப்பா
என் தங்கமே அனிதா
சாவை முத்தமிட
ஏனடா நீ துணிந்தாய்?

உரிமையின் குரல்ஓங்க
எப்பவாவது ஒரு தலித்
எவனாவது இங்க சாகனும்
என் தங்கை செத்துப் போய்ட்டா

மகாஜனங்களே
அழுகுரல் கேட்கிறதா?

#பாரதிகனகராஜ்
01.09.17

Comments

Popular Posts